கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு கிராமத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக ஏறத்தாழ 20 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக 2001ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் வீட்டுவசதி வாரியத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெண்டர் கோரப்பட்டு, அந்த நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற மக்களிடம் கருத்து கேட்டு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பிற்கு பிறகே தங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை அறிந்த நில உரிமையாளர்கள் பழனிசாமி, சந்திரமதி உள்ளிட்ட பலர் நில கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை என்றும், இழப்பீட்டு வழங்கியது சட்டத்தைப் பின்பற்றி வழங்கவில்லை என்றும், நீண்ட காலத்திற்கு பிறகு அவசரகதியில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் திட்டத்தை 1999ஆம் ஆண்டிலிருந்தே படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், வழக்குத் தொடர்புடைய நிலம் குறித்த உண்மை ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்று நில கையகப்படுத்தும் பணிகள் காலாவதியாகிவிட்டதால், அந்த நடைமுறைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், ஆவணங்கள் மாயமானது குறித்து மாநில அரசு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கையும், தனி நபர்களுக்கு தொடர்பிருந்தால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
பொதுநலனை கருத்தில்கொண்டு அரசுத் திட்டங்களை அமல்படுத்தும்போது, அரசு துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் சுயலாபத்திற்காக வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, அந்த கறுப்பு ஆடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல்விட்டால் பொதுநலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்ததுடன், இந்த உத்தரவை பெற்றவுடன் அரசு உடனடியாக செயல்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.