பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் நேற்றிரவு 11 மணியளவில், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் இவரின் உடல், இன்று (மே.18) மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவி்த்து வருகின்றனர்.
இந்நிலையில், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், " 'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!" எனப் பதிவிட்டுள்ளார்.
அதே போல, நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்து விட்டேன், தற்போது 80 வயதில் எனது ஞானத்தை இழந்துவிட்டேன் என கி.ராவுக்கான இரங்கலில் நடிகர் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.