சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (28). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு தனது வீட்டருகே காரை நிறுத்திவிட்டு தனது காதலியுடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சிவகுரு, திலகர் பாபு ஆகியோர், சிவராஜ் தனது காதலியுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், காவலர் சிவகுரு அந்தப்பெண்ணின் செல்ஃபோன் எண், முகவரியை பெற்றுக்கொண்டதோடு ஆபாசமாகவும் பேசியுள்ளார். பின்னர், சிவராஜை மிரட்டிய காவலர்கள் அவரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
மறுநாள் அந்த பெண்ணின் செல்ஃபோன் எண்ணுக்கு காவலர் சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை தனது காதலனான சிவராஜிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து சிவராஜ் புகார் அளித்துள்ளார். இதை விசாரித்த இணை ஆணையர் மகேஸ்வரி, தலைமை காவலர் சிவகுரு, காவலர் திலகர் பாபு ஆகியோரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் கைது செய்த அலுவலர் உயிரிழப்பு!