நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது தந்தை, பேராசிரியர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் நாள்தோறும் புதுபுது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நீட் தேர்வு மையங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து மையங்களுக்கும் சிபிசிஐடி காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரே பெயர், ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்களின் விவரங்களை அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்போரூரை சேர்ந்த அபிராமி, சென்னையைச் சேர்ந்த பிரவீன், ராகுல் ஆகிய மூன்றுபேரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த புகாரில் மாணவி அபிராமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.