கரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மாநில அரசின் 144 தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பால், மருந்து, மளிகை பொருள்கள் போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருள்களை வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல் துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல். ரவி பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், ”21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
காவல் துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடி நடத்துகின்றனர். சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர அவர்களை தண்டிக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை.
ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ள சூழலில், காவல் துறை தாக்கும்போது மக்களும் சில இடங்களில் திருப்பி தாக்குகின்றனர். எனவே தடை உத்தரவு என்ற நிலையில் மக்களை துன்புறுத்த தடை விதிக்க வேண்டும்”என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் சுப்பையா, பெங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் இந்த மனுவை வழக்கமான நீதிமன்ற அமர்வில் பட்டியலிடபட்டு விசாரணைக்கு வரும்போது எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவித்து அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர்.
இதேபோல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும் பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் அதிகாரம் இல்லை அமைச்சரவை பரிந்துரைபடி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, தற்போது பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது தொடர்பாக அவசர வழக்கை விசாரிக்க வேண்டும், தடை உத்தரவை நீக்கக்கோரி அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரீசிலிக்க உத்தரவிட வேண்டும் என டிராபிக் ராமசாமி சார்பில் முறையிடப்பட்டது.
ஆனால் இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் இது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் மனுவாக தாக்கல் செய்தால் வழக்காமன நீதிமன்ற அமர்வில் பட்டியலிடபட்டு விசாரணைக்கு வரும் போது விசாரிக்கபடும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க.... காய்ச்சலால் பெண் உயிரிழப்பு: பீதியில் ஊர் மக்கள்!