சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுடன் ஆலோசனை நடத்திய பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, " திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்கலாம், அந்த இடங்களை கொடுக்காவிட்டால் தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. காங்கிரஸின் சுயமரியாதையை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களது ஒட்டுமொத்த கருத்து.
கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால் திமுக கூட்டணியிலும் மாற்றம் ஏற்படும். கமல் ஹாசன் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து குறித்து தினேஷ் குண்டுராவ் கேட்டறிந்தார். தனித்து போட்டியிடவும், மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் பேசுகையில், "ராகுல் காந்தியின் தமிழ்நாடு வருகைக்குப் பின்பு இங்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது. திமுக தொடர்பான கூட்டணியிலேயே நாங்கள் தொடர விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு மரியாதையான இடங்களை கட்சிக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளோம். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவிற்கு அனைவரும் கட்டுப்படுவோம்.
வெற்றி தோல்வி என்பது அந்தந்த காலக்கட்டத்தை பொறுத்தது. அதனை வைத்தே தற்பொழுது இடங்களை வழங்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளுக்கு குறையாமல் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
காங்கிரஸ் பேரியக்கத்துக்கு என்று ஒரு மரியாதை, தனித்துவம் உள்ளது. அதனை விட்டு கொடுக்கக்கூடாது என்பதே தொண்டர்களின் மன நிலையாக உள்ளது" என்று கூறினார்.