எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சர்வானந்த். இவர் அடுத்ததாக பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பானது இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் நடைபெற்றது. இந்த பட ஷூட்டிங்கை கண்ட அங்குள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பார்ப்பதற்கு வந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனைப் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் படக் குழுவினரை சந்தித்து ஷூட்டிங்கை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இந்த படத்தின் மேனேஜரான ராஜாராம் படப்பிடிப்புக்கான அனுமதியை தலைமை செயலகத்தில் பெற்றுவிட்டதாக முறையிட்டுள்ளார்.
தலைமை செயலகத்தில் பெறப்பட்ட அனுமதி கடிதத்தை படப்படிப்பு நடத்தக்கூடிய எல்லைக்குட்பட்டுள்ள காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும் எனவும் அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடத்தியதாக கூறி படத்தின் மேனேஜர் ராஜாராம் மீது 269, 41 உட்பட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.