கரோனா தொற்றைப் பரவாமல் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குச் சென்ற 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கினால், நீண்ட நாள்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்த நிலையில் தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய தூதரகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மருத்துவத் துறைக்கு உரிய ஊக்குவிப்பு இல்லை - நீதிபதிகள் வேதனை
ஊரடங்கினால் இந்தியா திரும்ப முடியாமல் இருப்பது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருப்பதால், உடனடியாக மத்திய, மாநில அரசுகள் காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடக்கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பில் அவரது வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மலேசியாவில் சிக்கியுள்ளவர்கள் இந்தியா திரும்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : வேளாண் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய மனு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு