யுவராஜ் சிங்-க்கு என்று ரசிகர்கள் மனதில் எப்போதும் ஒரு இடம் தனியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டிகளில் அவர் களமிறங்கும் போதும் ரசிகர்கள் அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். புற்றுநோய் குணமடந்து திரும்பி வந்தபின், யுவராஜ் சிங் பெரிதாக சோபிக்கவில்லை. அது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. இதனால் ஐபிஎல் அணிகளில் பஞ்சாப், புனே, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு என பல அணிகளால் வாங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
பின்னர் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது மும்பை அணியால் வாங்கப்பட்டு இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் களமிறக்கப்படுவாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் முதல் போட்டியிலேயே களம் கண்டார்.
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் இளம் வீரர்கள் அனைவரும் விக்கெட்டை இழந்து தடுமாற, யுவராஜ் சிங் களமிறங்கி சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அப்போட்டியில் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தபோது டிவிட்டரில் விண்டேஜ் யுவி இஸ் பேக் என டிரெண்டாகியது.
இதனையடுத்து நேற்று பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில், 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தபோது, சாஹல் பந்துவீச வந்தார். வேகப் பந்துவீச்சுக்கு எதிராக சற்று நிதானம் காட்டும் யுவராஜ் சிங், ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக சிறிதும் யோசிக்காமல் மூன்று சிக்ஸர்களை விளாச, மைதானத்தில் இருந்த ரசிகர்கள ஆர்ப்பரித்தனர். அதிலும் அந்த இரண்டாவது சிக்ஸரை பவுலரின் தலைக்கு மேல் பளார் என அடித்து, விண்டேஜ் யுவியை நியாபகப்படுத்த, மூன்றாவது சிக்ஸரில் தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
யுவராஜ் சிங் என்றாலே 2007-டி20 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததுதான் பெரும்பாலும் ரசிகர்களுக்கு நியாபகம் வரும். நேற்றையப் போட்டியில் அதனை திரும்பவும் செய்து காட்டினார்.