பொதுவாக, சாதனை என்பது முதலில் படைக்கப்படும் பின், முறியடிக்கப்படும். ஆனால், முதலில் சாதனையை படைப்பதுதான் மிகவும் கடினமானது. அதனால்தான் படைப்பாளர்களின் பெயர்கள் காலத்திலும் அழியாமல் நிலைத்திருக்கிறது. இதை ஏன் கிரிக்கெட்டில் குறிப்பிடுகிறேன் என்றால், இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகும் இரண்டு வீரர்களும் மற்றவர்கள் தொடமுடியாத சாதனைகளைப் படைத்துள்ளனர். இவர்களை இணைத்ததே ஆகஸ்ட் 14ஆம் தேதிதான்.
வாய்ப்பை நழுவவிட்ட டான் பிராட்மேன்:
கிரிக்கெட்டில் மிகவும் தவிர்க்கமுடியாத வீரர் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். E.A Sports 07, வீடியோ கேம் ஆடினாலும், இவரது பேட்டிங் ஆவரேஜை நெருங்கக் கூட முடியாது. 1930, 40களில் ஆங்கிலயர்கள்தான் உலகத்தை ஆண்டனர். ஆனால், இவரோ தனது பேட்டிங்கால் அந்த ஆங்கிலேயர்களே ஆண்டார். ஆம், ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்கள் அவர்களது சொந்த மண்ணில் ஆழவிட்டவர், டான் பிராட்மேன். இவரது பேட்டிங்கை பார்ப்பதற்காகவே, ரசிகர்கள் எப்போதும் அதிகளவில் மைதானத்துக்கு வருகை தருவார்கள்.
1928இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், 1948இல் இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறவிருந்தார்.
அதுவரை 79 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடிய டான் பிராட்மேன் 12 இரட்டை சதம், 29 சதம் என மொத்தம் 6,996 ரன்களை அடித்து ஜாம்பவான் வீரராக திகழ்ந்தார். இவரது கடைசி இன்னிங்ஸ் ஆகஸ்ட் 14இல் நடைபெறுகிறது. அப்போது, இவர் நான்கு ரன்கள் அடித்தால் பேட்டிங் ஆவரேஜில் சதம் அடித்து, ஆவரேஜில் சதம் வைத்திருக்கும் வீரர் என யாரும் யோசிக்காத சாதனைப் படைக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்காக இவர், களத்திற்கு செல்லும் போது, ரசிகர்கள் எழுந்துநின்று கைகளைத் தட்டி அந்த (God Father) க்கு காட் ஆஃப் ஹானர் தந்தனர்.
பின்னர், க்ரீஸுக்கு வந்த பிராட்மேன் நான்கு ரன்களை அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஏரிக் ஹோலிஸை எதிர்கொண்டார் பிராட்மேன். முதல் பந்தை டாட் பாலாக வைத்த பிராட்மேன், பின்னர் அடுத்த பந்திலேயே க்ளீன் போல்ட் ஆனார். இதனால், ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆன வருத்தத்தில் பெவிலியனுக்கு திரும்பினார். இதனால், இவரது ஆவரேஜ் 100ஆக எட்டாமல் 99.94ஆக இருந்தது. இந்த சாதனை நழுவியதே என்ற சோகம் ரசிகர்களின் முகத்திலும் காணப்பட்டது.
சச்சினின் தொடக்கம்:
1989இல் சச்சின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானலும், 1990இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்தான் இவருக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. ஏனெனில், இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இவர் தனது சிறப்பான பேட்டிங்கால் அணியை தோல்வியில் இருந்து டிரா செய்ய வைத்தார்.
அதுமட்டுமின்றி, தனது முதல் சதத்தையும் அடித்து, தான் இனி கிரிக்கெட்டை ஆளப்போகிறவன் என்பதற்கு அறிகுறியையும் போட்டார். அதன்பின்னர், சச்சினின் பேட்டிங் உலகம் முழுவதும் பேசப்பட்டது.
பிதாமகனும், கடவுளும்:
குறிப்பாக, 1999இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சச்சின் சென்றிருந்தார். அப்போது, டான் பிராட்மேன், சச்சினின் பேட்டிங்கை பார்த்தால், எனது ஆட்டத்தையே திரும்பி பார்ப்பதுபோல் இருக்கிறது என்றார். இப்படி தனது மருஜென்மக்காரரை கண்டுபிடித்த பிராட்மேன் தனது 90ஆவது பிறந்தநாள் விழாவில் சச்சினை சிறப்பு விருந்தினராக அழைத்தார். இதனால், சச்சின்தான் அடுத்த டான் பிராட்மேன் என்றே ரசிகர்கள் அழைத்தனர். டான் பிராட்மேன் கிரிக்கெட்டின் God Father என்றால், சச்சின் கிரிக்கெட்டின் கடவுளாக மாறினார்.
ஒருவருக்கு கிடைக்காதது, பின் மற்றவருக்கு கிடைப்பது இயல்புதான். ஆனால், அது எப்படி கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அப்படி, டான் பிராட்மேனுக்கு கிடைக்காதது, சச்சினுக்கு கிடைத்தது. ஆம், டான் பிராட்மேன் ஆகஸ்ட் 14இல் தான் ஆவரேஜில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஆனால், 42 ஆண்டுகளுக்கு பிறகு அதே ஆகஸ்ட் 14இல் தான் சச்சின் தனது முதல் சதத்தை அடித்தார். இதனால், கிரிக்கெட்டில் 100 சதம் அடிக்கும் வாய்ப்பும் ஆகஸ்ட்14இல் தான் அவருக்கு அமைந்தது.
வரலாற்றை திரும்பி பார்த்தால், குறிப்பிட்ட நாளில் பல்வேறு சம்பவங்களோ சாதனைகளோ நிகழ்ந்திருக்கும். அது ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். அந்த வகையில், கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன், கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் இருவரையும் ஆகஸ்ட் 14ஆம் தேதிதான் இணைத்தது. இதனால், கிரிக்கெட்டின் டான் பிராட்மேனின் மருஜென்மம் சச்சின்தான் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.