இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15 முதல் 19ஆம் தேதிவரை பிரிஸ்பேனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சிட்னியில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால், அங்கிருந்து பிரிஸ்பேன் வருபவர்கள், கூடுதலாக சில நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், வீரர்கள் தங்கியிருக்கும் தளத்தைவிட்டு வேறு பகுதிக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் செல்ல மறுத்துள்ளனர். இதற்காக முகக்கவசம் அணியாமல் சிட்னி மைதானத்துக்கு வந்து தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார் ரவி சாஸ்திரி. இந்திய அணி கேப்டன் ரஹானேவும், பிரிஸ்பேன் செல்வது குறித்த உறுதியான தகவலைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும் கரோனா பரவல் காரணமாக குயின்ஸ்லாந்தின் மூன்று நாள் ஊரடங்கும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்வி எழத்தொடங்கியது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் நடைபெறுமென ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் தலைமை நிர்வாக அலுவலர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஹாக்லி, "பிரிஸ்பேனில் நான்காவது டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அனுமதியளித்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்காக கடுமையாக உழைத்துவருகிறோம்.
எங்களின் கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்புத் தந்த குயின்ஸ்லாந்து அரசிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே திட்டமிட்டபடி நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும். இருப்பினும் வீரர்கள், போட்டி அலுவலர்கள் தங்களது பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிட்னி டெஸ்ட்: அதிரடியில் மிரட்டும் பந்த்; வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!