இந்தியாவில் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் பிரிவுகள் இருந்தாலும் கலை, பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களில் பிரிவுகள் இன்றி ஒருமித்த கருத்து நிலவுவதாலேயே, பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படங்களை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்று மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள் மாபெரும் வெற்றியும் அடைந்துள்ளதால், தொடர்ந்து மொழி மாற்றுப் படங்களை தங்கள் மொழிகளில் உருவாக்குவதில் திரையுலகத்தினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தமிழில் கடந்த ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படம் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆகும். அதனைத் தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்தியில் வெளியாகி வெற்றிப்பெற்ற 'ஆர்டிக்கிள் 15' படம் தயாராக உள்ளது. இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக்கை 'கானா' திரைப்பட இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான போனி கபூர் 'ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூரின் பே வியூ ப்ரொஜெக்ட் வழங்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் பணியாற்ற உள்ள நடிகர், நடிகை தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் கூறுகையில், "பல வருடங்களாக திரை உலகில் தயாரிப்பு, திரைப்பட விநியோகம் உள்ளிட்டப் பணிகளை செய்து வந்த நான், தற்போது தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் அடுத்தக் கட்டத்திற்கு நகரப் போகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் போனி கபூருக்கு எனது நன்றிகள்.
அதேபோன்று நான் திரைத்துறையில் ஆரம்ப காலங்களில் பணியாற்றிய நிறுவனம் ரெட் ஜெயின்ட். நான் பணியாற்றிய அதே நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை வைத்து தற்போது நான் படம் தயாரிப்பது, எனக்கு பெருமை அளிக்கிறது.
'ஆர்டிக்கில் 15' படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்ற போனி கபூர், தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் படத்தை இயக்குவதற்கான எங்களின் முதல் தேர்வாக இருந்தது, இயக்குநர் அருண் ராஜா காமராஜ். சமூக அவலங்களை தோலுறித்துக் காட்டும் இந்தப் படத்தை இயக்க சிறப்பான தேர்வாக அவர் இருந்தார். இந்தப் படத்தின் கதாநாயகனுக்கான ஒரே தேர்வாக விளங்கியது நடிகர் உதயநிதி ஸ்டாலின்தான். பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாராக உள்ள இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்க உள்ளன. அதற்கான அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம்" என்றார்.
இதையும் படிங்க... ‘ஆர்ட்டிகள் 15’ - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்?