சென்னை: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று (பிப்.26) மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பு 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மண்டல அலுவலகம் முன்பு எல்பி எஃப் கிளைச் செயலாளர் இளங்கோ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஊதிய ஒப்பந்தம் குறித்து வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 524 பேருந்துகளில் வெறும் 80 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.