திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகள் பிரியதர்ஷினி இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்துள்ளார். இதனால் இடது முழங்கையில் காயம் ஏற்பட்டு பிரியதர்ஷினியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அம்மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அழைத்துச்செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள முத்தூட்ஸ் மருத்துவமனைக்கு (தனியார் மருத்துவமனை) மேல்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் நேற்று முன்தினம் (டிசம்பர் 2) அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அன்று இரவு 11 மணியளவில் பிரியதர்ஷினி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் கையில் ஏற்பட்ட காயத்திற்கு உயிர் எப்படி போகும் என்று மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.