மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் 14ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றினர்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமுருகன் காந்தி கூறுகையில், “பாஜக அரசு கொண்டுவந்த எந்த ஒரு சட்டமும் மக்களுக்கு பயன்தராது. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது பொருளாதார நிலை மிகவும் மோசமாகவும், கவலையளிக்கும் விதமாகவும் உள்ளது. பொருளாதாரம் முற்றிலும் விழுந்து போய் கிடக்கிறது. இதனை மறைக்கவே மதக்கலவரத்தை இந்து அமைப்புகள் தூண்டிவருகின்றன. அதேபோல தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசைப் போல, இங்குள்ள காவல் துறையும் பாஜகவின் கட்டுப்பாட்டிலுள்ளது. அதன் காரணமாகவே ஜனநாயகத்திற்கு விரோதமாக பேசிவரும் ஹெச். ராஜா மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க காவல் துறை தயங்கிவருகிறது" என்று தெரிவித்தார்.