விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த உறங்காப்புலி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்," விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் உச்சநேத்தல் கிராமத்தில் கிருது மால் நதி செல்கிறது.
இப்பகுதியில் சிலர் சவடு மண் அள்ளுவதாகக் கூறி அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் கிருது மால் நதியில் 30 அடி ஆழம் வரை தோண்டி, நூற்றுக்கணக்கான லாரிகள் மூலமாக மணல் அள்ளி சென்று விற்று வருகின்றனர்.
இந்நிலை, நீடித்தால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாய ஆழ்துளை கிணறுகள் வறண்டு போகும் அபாயம் உள்ளது. மேலும் எங்கள் பகுதி விவசாயத்திற்கு கிருது மால் நதியில் இருந்து தண்ணீர் வரும் பாதையும் தடுக்கப்பட்டுவிடும்.
எனவே இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்த மனு இன்று(ஜூலை 7) நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கிருது மால் நதியில் மணல் அள்ளுவது தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு இவர்களுக்கு சவுடு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கனிமவள துறை துணை இயக்குநர், திருச்சுழி வட்டாட்சியர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவனம் நடத்திவரும் உப்பளத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்