கோவை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கணியூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மதுரை திருமங்கலம் மற்றும் சிவகாசி, கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன், வீராணம், வினோத் குமார், ஆகியோர் என தெரியவந்தது. மேலும் அவர்கள் கோவை புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இவர்களுடைய கூட்டாளிகளான திருப்பூரைச் சேர்ந்த தங்கவேல், மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், சண்முக பாண்டி உள்ளிட்ட பலர் கூட்டாளிகளாக இருந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த தங்கவேல் பாஸ்கர், சண்முக பாண்டி ஆகியோரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தங்கவேல் கடந்த மே மாதம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் ஒருவரை தாக்கி 4.25 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு, மற்றும் இருசக்கர வாகனங்கள் திருடியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தங்கவேல், சண்முக பாண்டி, பாஸ்கர், ஆகியோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் சூலூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.