கோயம்புத்தூர்: துடியலூர் அடுத்த வரப்பாளையம், பன்னிமடை பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் ஏராளமான யானைகள் இந்தப் பகுதி வழியாக வலசை செல்வது வழக்கம்.
அவ்வாறு வரும் யானைகள் நீர், உணவுத் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு (பிப்ரவரி 11) வரப்பாளையம் கிராமத்திற்குள் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது.
இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது வாழைத் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து வனத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த வனத் துறையினர் யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை (பிப்ரவரி 12) மனோகரின் வாழைத் தோட்டத்தில் யானை உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்த வனத் துறையினர் ஆய்வுமேற்கொண்டனர்.
அதில் உயிரிழந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், அதன் தும்பிக்கை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வனத் துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுமேற்கொண்டனர்.
மேலும் மின் வாரிய அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் சம்பவ நடந்த தோட்டத்தைச் சுற்றிலும் ஆய்வுமேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து யானை இறப்பு குறித்து தோட்ட உரிமையாளர் மனோகரனிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நாய்க்கு நன்றி மட்டும் அதிகமில்லை; துணிச்சலும்தான்! - பாம்பை நாய் கடித்துக் கொன்ற சிசிடிவி!