கரோனா தீநுண்மி தொற்று குறித்தும், அதிலிருந்து தற்காத்துக்கொள்வது பற்றியும் நாடு முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
அந்த வகையில், சென்னையின் தென்பகுதி நுழைவு வாயிலாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலையத்தில் கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக வினைல் ஸ்டிக்கர்கள் ஒட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதில் கரோனா யுத்தத்தை எதிர்கொண்டு பொதுமக்களைக் காப்பாற்றும் படை வீரர்கள் எனக் கூறப்படும் மருத்துவர்கள், செவிலியர், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் முகத்திரை அணிந்தவாறு வரையப்பட்டுள்ளன.
அத்துடன் தகுந்த இடைவெளியை அறிவுறுத்தும்விதமாகவும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கரோனா காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளை வெளிக்காட்டும்விதமாக ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
நாட்டிலேயே முதல் முறையாக கரோனா விழிப்புணர்வை முன்னிறுத்தி தாம்பரம் ரயில் நிலைய முகப்புக் கட்டடம் முழுவதும் வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது.