மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடியில் கொடிக் கம்பம் நடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, குமரி ஆனந்தன், மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சத்தியமூர்த்தி பவனில் 150 அடியில் கொடிமரமும், ஆறு அடியில் காந்தியின் சிலையும் நிறுவப்பட உள்ளது.
நேற்று நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவர்கள் பெரு நிறுவனங்களுக்கு சில சலுகைகள் அறிவித்திருப்பது பாஜகவுக்கு பொருளாதாரத்தில் அ, ஆ, இ கூட தெரியாது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 30ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கூட்டமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.