இது குறித்து தென்காசி மாவட்டத்தை அடுத்த குற்றாலத்தில் இன்று (ஜூன் 25) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "மத்தியில் பிரதமர் மோடியின் கடந்த ஆட்சி காலத்திலும் சரி, இந்த ஓராண்டிலும் சரி பாஜக அரசு மகத்தான சாதனைகளை செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது, முத்தலாக் சட்டத்தை ரத்து செய்தது போன்ற பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இந்தியா முழுவதும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், 9 கோடி பேருக்கு மேல் இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
கரோனா தொற்றால் உலக நாடுகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. உலக நாடுகள் போற்றும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு பெருமை சேர்க்கும் நல்ல திட்டத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். மேலும், கரோனா காலத்தில் மட்டும் 9 ஆயிரம் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல ரயில்கள் கரோனா சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன.
கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு அரசே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல. பொதுமக்களும் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல்துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரால் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படக் கூடாது" என்றார்.