தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையும் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையின் தலைமை இயக்குநர் சரத் ரெட்டியும், 52 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஊழியரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இருந்த போதிலும், மருத்துவமனையில் தொடர்ந்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் 118 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிமாக மூடியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விஜயா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையின் செயல்பாடுகள் தற்காலிமாக நிறுத்தப்படுகின்றன. ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள், விஜயா மருத்துவமனையில் எதிரே அமைந்துள்ள விஜயா ஹெல்த் மையத்திற்கு மாற்றப்படுவார்கள்.
வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பின் வழக்கம்போல் மருத்துவ சேவைகள் தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.