கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
கடந்தாண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால், பெருமுளை, அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரம்பியது. இதன் காரணமாக விவசாயிகள் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், பெருமுளை ஏரியில் மீன்பிடிக்க மீன்வளத் துறையின் மூலம் அலுவலர்கள் ஏரியை குத்தகைக்கு விடுத்துள்ளனர்.
குத்தகைக்கு எடுத்த மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன் பிடிப்பதற்காக ஏரியில் உள்ள மதகை இரவோடு இரவாக உடைத்துள்ளனர்.
அதனால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களிலும் புகுந்து நாசமாக்கின.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏரியிலிருந்து மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் பொதுப்பணித் துறை அலுவலர்களைக் கண்டித்தும் நீரை திறந்துவிட்ட குத்தகைதாரர்களைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது சம்பந்தமாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வேலூரில் வனவிலங்குகள் வேட்டையாடல் - இரண்டு பேர் கைது!