திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் செம்பட்டியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஊழியர் ஒருவர், அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் உள்ள கரோனா சிறப்பு தனிமைப்படுத்தல் முகாமில் சுழற்சி முறையில் பணிக்கு சென்றுள்ளார். அங்கு பணிபுரிபவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில், பெண் ஊழியருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வெளியூரிலிருந்து வந்த மேலும் ஒரு பெண் உள்பட இரண்டு சிறுவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தல் முகாமில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் பெண் அலுவலர் பணியாற்றிய நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. தற்போது ஊராட்சி அலுவலகம் முழுவதுமாக பூட்டப்பட்டது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அலுவலகம் திறக்கப்படாது என கூறப்படுகிறது.