புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், புதுச்சேரியில் ரூ.490 மதிப்புள்ள 10 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதுவை மாநில சட்டப்பேரவை கேபினட் அறையில் செய்தியாளர் சந்திப்பில், ”பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்களுக்கு பொங்கல் பரிசாக 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
தொகுப்பில் உள்ள 10 பொருள்கள்
இவை அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தப் பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய், துவரம் பருப்பு, பச்சைப் பருப்பு உள்ளிட்ட 10 பொருள்கள் உள்ளடங்கியதாக இருக்கும்.
இளைஞர் தின விழா புதுச்சேரியில் நடத்தப்பட இருந்தது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் பிரதமர் வருகை ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் அந்தந்த மாநிலங்களில் காணொலி காட்சி மூலம் இதில் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கு உதவித்தொகை
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். விடுபட்ட ஆறாயிரம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியாக 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்க ரூ. 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலைகள் அமைக்கப்படும்.
கடந்த காலத்தில் ஆளுநர், ஆட்சியாளர்கள் ஒற்றுமை இல்லாததால் மாநில வளர்ச்சி சீரழிந்து இருந்தது. தற்போது ஆளுநரும், ஆட்சியாளர்களும் இணைந்து செயல்படுவதால் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.
அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும்
கரோனா பரவலால் பள்ளிகள் மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அரசு பொறுப்பேற்று ஏழு மாதங்களில் இவ்வளவு திட்டங்களைச் செய்துள்ளோம். இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன. அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி மூலமாக மட்டுமே நடத்தப்படும்!