சீனாவில் தோன்றி உலகையே மிரட்டி வரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 84க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்தக் குழப்பமான சூழலில் கோவிட்-19 வைரஸ் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா நம்மிடையே விளக்கமளித்துள்ளார். ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பிரத்யேகப் போட்டியில், "யாரும் பயப்பட வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை மோசமாக இல்லை.
இந்த நோய்க்கு குறிப்பிடும்படியான அறிகுறிகள் ஏதும் இல்லை. சளி, காய்ச்சல், வறட்சியான தொண்டை, இருமல், உடல் வலி உள்ளிட்டவை ஜலதோஷம் உள்ளிட்ட நோய்களாலும் வரக்கூடும். ஆனால், கடந்த 14 நாள்களில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அதிகமாகப் பரவியுள்ள பகுதிக்குச் சென்றிருந்தாலோ, அல்லது அந்த வைரஸால் பாதிக்கப்பட்டோருடன் அருகில் சென்றிருந்தாலோ மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும். உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களது கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். குறிப்பாக, வெளியில் சென்று வரும்போதும், மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் பயணித்து விட்டு வீடு திரும்பினாலோ நிச்சயம் சோப் அல்லது சானிடைசர் போட்டு கைகளைக் கழுவ வேண்டும். அப்படிச் செய்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படும்” என்றார்.
நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது மிகவும் நல்ல முடிவு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிகம் கூடுவர். ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட மற்றவருக்கு வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது" என்றார்.
கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்ற கேள்விக்கு, "கோவிட்-19 டாஸ்க் ஃபோஸ் என்ற மருத்துவக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். நோயாளிகளைக் கையாளத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர்கள் செய்து வருகின்றனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க : குமரியில் 10 ரூபாய்க்கு சிக்கன் 65 - கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி!