புரட்டசி மாதத்தில் ஆண்டுதோறும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவ விழா உலக பிரசித்திப்பெற்றது. இந்தாண்டிற்கான பிரமோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் இன்று தொடங்கவுள்ளது. இதையொட்டி திருமலை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமான மின் விளக்குகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இதனால் முழு திருமலையும் பூலோக வைகுண்டம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் பிரமோற்ச விழாவுக்கான கொடியேற்றப்பட்டதுடன் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சாத்துகிறார். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இருவேளைகளில் நான்கு மாட வீதிகள் வழியாக பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கருட சேவை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சுமார் மூன்றுப் லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமோற்சவத்தை முன்னிட்டு, இந்த முறை திருமலையில் முதல்முறையாக அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. பிரமோற்சவ விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் பொருட்கள் திருடுபோவதை தடுக்க கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் திருமலையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.