பஞ்சாபில் மிகவும் பிரபலமான ஜாலியன்வாலாபாக் நேஷனல் நினைவு அறக்கட்டளை வளாகம் சீரமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேற்பார்வையின் கீழ் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கிய பணியானது, தற்போது நிறைவடைந்து மக்களின் பார்வைக்காக திறக்கவுள்ளது. வரும் ஜூலை 31ஆம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சீரமைப்பு பணிகள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வைத் மாலிக் மேற்பார்வையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள அரங்கில் வீரர்களின் புகைப்படங்களுக்கு அருகில் இரண்டு பெண்கள் அரை நிர்வாணமாக இருக்கும் படங்கள் இருப்பதற்கு, சர்வதேச சர்வ் கம்போஜ் சமாஜ் தலைவர் பாபி கம்போஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"ஜாலியன்வாலாபாக்கில் பள்ளி குழந்தைகள், குடும்பங்களை என நூற்றுக்கணக்கானோர் தினந்தோறும் வருகை தருகிறார்கள். அங்கு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. ஆனால், வீரர்களின் புகைப்படங்கள், சீக்கிய குருக்களின் ஓவியங்கள் இருக்கும் கேலரியில் இரண்டு பெண்கள் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இருப்பது அவமானமாக உள்ளது.
நமது நாட்டின் பிரதமர் இதுதொடர்பாக உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நீக்க வேண்டும். மேலும், நுழைவு வாயிலில் ஷாஹீத் உதம் சிங்கின் சிலைக்கு முன்னால் டிக்கெட் கவுன்ட்டர் இருப்பது தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். உடனடியாக டிக்கெட் கவுன்ட்டரையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக பேசிய அறங்காவலர் மாலிக் , " இரண்டு அரை நிர்வாண பெண்களின் புகைப்படங்கள் கேலரியில் நிறுவப்பட்டுள்ளது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. இதுதொடர்பாக விசாரித்துவிட்டு கருத்து கூறுகிறேன்" என்றார்.