கரோனா நடவடிக்கைகள் குறித்து புதிய காணொலி ஒன்றினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். அதில், “புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று அதிகரித்துவருகின்றது. இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, கேன்சர் உள்ளவர்களுக்கு தான் அதிகளவில் பரவிவருகின்றது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும், முகக் கவசம் அணியவேண்டும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் அதிகளவு வெளியே வருகின்றனர். பொதுமக்களிடம் கட்டுப்பாடுகள் அதிகளவு இல்லை. நகைக்கடை, துணி கடை மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நாங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். வரும் செவ்வாய் அன்று அமைச்சரவை கூடி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளதால் நாளை மறுதினம் (ஜூன் 16) பிரதமர் மோடியுடன் காணொலியில் பேசும்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அதிகப்படியான நிதி வழங்க கோரிக்கை வைக்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நகர பகுதிகளில் இயங்கி வரும் பல காய்கறி, மளிகை கடைகள் அரசின் உத்தரவை மீறி செயல்படுகின்றது. தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவில்லை, சானிடைசர் வைக்கவில்லை. கடைகளில் அரசின் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: இலவச மருத்துவ ஆலோசனை வழங்க முன்வாருங்கள் : டாக்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்