மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், கிராமியக் கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி, புதுச்சேரி கடற்கரை சாலையிலுள்ள, காந்தித் திடலில் நடைபெற்றுவருகிறது. இக்கண்காட்சியை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கிவைத்தார். வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தலைமைச்செயலர் அஸ்வனி குமார் மற்றும் பல அதிகாரிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புற குழுக்களின் 150க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். மேலும் 180க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்துத் தங்களது பொருட்களை, விற்பனை செய்துவருகின்றனர்.
இந்தக் கண்காட்சியில் காஞ்சிபுரம் பட்டு, புதுச்சேரி கைவினைப் பொருட்கள், ஹரியானா சீருடைகள், ஆந்திரப் பிரதேசத்தின் படுக்கை விரிப்புகள், கேரளப் பாரம்பரிய உடைகள் போன்றவை விற்பனைக்கும், காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கிராமியக் கைவினை விற்பனைக் கண்காட்சி, இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.