இந்திய தேசிய ராணுவத்தின் தந்தையும் சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்த நாளை 'பரக்ராம் திவாஸ்' என்ற பெயரில் பிரமாண்டமாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அதனை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, கொல்கத்தாவிற்கு செல்லவுள்ளார்.
அதேநாளில், அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மோடி பட்டா வழங்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் மோடியின் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
நோதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கொல்கத்தா விக்டோரியா நினைவிடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார்.
125ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நிரந்தர கண்காட்சியை மோடி திறந்துவைக்கிறார். அதுமட்டுமின்றி, நாணயம், தபால் தலை ஆகியவை வெளியிடப்படவுள்ளன.