ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடித் திட்டங்களை அறிவித்து வருகிறார். முன்னதாக, தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு 9 மணி நேரம் இடைவிடாத மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் பரப்புரையின்போது வாக்குறுதியளித்திருந்தார்.
இது தொடர்பாக குண்டூரில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் மின்வாரியத் துறை உயர் அலுவலர்களுடன் ஜெகன்மோகன்ரெட்டி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் விவசாயத்திற்கு இன்று முதல் பகலில் 9 மணி நேரம் இடைவிடாத இலவச மின்சாரம் வழங்க மின்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் இதுவரை இரவில் 7 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டதால், பலர் மின்சாரம் தாக்கியும், பாம்புக்கடி, விஷக்கடி ஆகியவற்றாலும் உயிரிழந்தனர். இதைத் தடுக்கும் வகையில் இன்று முதல் பகலில் 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும். இதற்காக அரசு ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.