கரோனாவை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களிலும் மது விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், ஆந்திர மாநிலத்தில் 25 சதவிகிதம்வரை மதுபானங்கள் ஏற்கனவே விலை உயர்வு கண்டுள்ள நிலையில் நேற்று, அம்மாநில அரசு மதுபானங்களின் விலையை மேலும் 50 சதவிகிதம்வரை உயர்த்தி அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அம்மாநிலத்தின் சிறப்பு தலைமைச் செயலர் ரஜத் பார்கவா, மதுபான நுகர்வைக் குறைத்து, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவே, இந்த அசாதாரண விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வரும், என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12 மணி தொடங்கி, இரவு 7 மணிவரை மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய கட்டண உயர்வு, ஏற்கனவே நிதியின்றி வாடும் ஆந்திர மாநில அரசுக்கு, இனி ஆண்டுக்கு 9,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயைப் பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள மொத்த மதுபான வியாபாரமும் மாநில அரசால், அதற்கு சொந்தமான 3,468 சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமே நடத்தப்படுகிறது. இதில் இந்த மாத இறுதிக்குள் 15 சதவிகித சில்லறை மதுபானக் கடைகளை மூடுமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நீட் தேர்வு எப்போது? தேதி அறிவிப்பு