தருமபுரி: ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று சனிக்கிழமை காலை நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், மாலை 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.