சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்திலிருந்து 13 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி மாலை விசைப்படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, நள்ளிரவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடலோர காவல் படையினர் தங்கச்சிமட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி விசைப்படகை மடக்கிப் பிடித்தனர்.
பின் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி 13 மீனவர்களையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 14 மீனவர்கள் இந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி விசைப்படகு ஒன்றில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, நள்ளிரவில் ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடலோர காவல் படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை மடக்கிப் பிடித்து, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி 14 மீனவர்களையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடுத்தடுத்து, கைது செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இலங்கை கடற்படைக்கு எதிராக ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிப்ரவரி 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 27 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மீன் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு.. நீலகிரியில் சோகம்!
இதையடுத்து, இந்தியத் தூதரக அதிகாரிகள் அவசரக்காலச் சான்றிதழ்களை வழங்கி மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். இதையடுத்து, 27 மீனவர்களும் நேற்று (பிப்ரவரி 26) இரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்ற நிலையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் மீனவர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.