திருச்சி: பஞ்சப்பூர் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே என் நேரு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு மாநகர பேருந்துகள் நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக திட்ட மதிப்பீடு ரூ.900 கோடி என கூறப்படுகிறது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை ரூ.349.98 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 டிச.30ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2022 ஜூன் 13 ஆம் தேதி நிர்வாக அனுமதி வழங்கியது. இந்த பேருந்து முனைய பணிகள் தற்போது 93 சதவீதம் முடிந்துள்ளன. இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும் போது தினமும் 2 லட்சம் பயணிகளை கையாளும் அளவிற்கு மிக தரமானதாகவும், பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகளை ஏப்ரல் மாதத்திலாவது முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். துறை அதிகாரிகளிடம் பேருந்து இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பயணிகளுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். மார்ச் மாதம் 31 ஆம் தேதி பேருந்து நிலையத்தை திறப்பதற்கு தேவையான வகையில் பணிகளை விரைந்து முடிக்க கூறியுள்ளேன்.
ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்படும் வரை தற்போது செயல்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படும். உள்ளூர் பேருந்துகள் முழுவதும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருச்சி மாநகர் பகுதியில் இருக்கும் மத்திய பேருந்து நிலையம் , சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.