சாலைப் போக்குவரத்து மாத விழாவில் குத்தாட்டம் போட்ட பெண்கள், முகம் சுளித்த மக்கள்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் சார்பில் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நேற்று (ஜன. 20) நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சதாசிவம், காவல் துறை ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பாதுகாப்பாக வாகனங்கள் இயக்குவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் தலைக்கவசம் அணியாதவர்களை நிறுத்தி அறிவுரை கூறினர். இதன்பின் போக்குவரத்துத்துறை சார்பில் ஆட்டம் பாட்டத்துடன், சினிமா குத்து பாடல்களுடன் ஆண், பெண்களின் நடனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண்களின் நடனம் பொதுமக்களை முகம் சுளிக்கும் வகையில் இருந்ததால், இது சாலைப் பாதுகாப்பு மாத விழாவா அல்லது ஆடலும் பாடலும் நிகழ்ச்சியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.