பிடிபட்ட சிறுத்தையை காட்டில் விடுவித்த வனத்துறையினர்.. திக் திக் காட்சிகள்! - erode siruthai
Published : Jan 15, 2024, 8:07 PM IST
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி என் பாளையம் வனசரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர், கொங்கர்பாளையம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வளர்த்து வந்த கால்நடைகளை மர்ம விலங்கு ஒன்று அவ்வப்போது வேட்டையாடி வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் டி என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கால்நடைகள் வேட்டையாடபட்டதாக கூறப்படும் இடங்களில் டி என் பாளையம் வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்தும், கேமராக்கள் அமைத்தும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கால்நடைகளை வேட்டையாடி வந்தது சிறுத்தை என உறுதி செய்தனர். பின்னர் கொங்கர்பாளையம் வெள்ளைக்கரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூண்டு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (ஜன.14) இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தையை இன்று (ஜன.15) அதிகாலையில் பவானிசாகர் வனசரகத்திற்கு உட்பட்ட மங்கலப்பட்டி என்னும் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டது. கொங்கர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்ட செய்தி அறிந்த கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.