திருவள்ளூர்: பழமையான பண்ணூர் ஆரோக்கிய அன்னை தேவாலய தேர் பவனி! - Cops from Mapedu Police Station
திருவள்ளூர்: கடம்பத்தூர் அடுத்த பண்ணூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 164 ஆண்டு பெருவிழா கடந்த மே 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 29 ஆம் தேதி சிறப்பு திருப்பலியை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி பங்கேற்று நடத்தினார். ஆரோக்கிய அன்னையின் முக்கிய விழாவான தேர் பவனி விழா இரவு தொடங்கியது.
விழாவிற்காக பிரத்தியேகமாக செய்யப்பட்ட சப்பரத்தில் புனித ஆரோக்கிய அன்னை மலர் அலங்காரத்துடன் காட்சி அளித்தார். அருட்தந்தை பிரகாஷ் தேர் மந்திரிப்பு திருப்பலி செய்து வைத்து தேர் பவனி தொடங்கி வைத்தார். வாண வேடிக்கையுடன் ஆடம்பர வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி தேவாலயத்தில் இருந்து தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதத்தினர் தவிர்த்து பிற மதத்தினரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் குடும்பத்துடன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுக் கொண்டு மெழுகுவத்தி ஏந்தி ஆரோக்கிய அன்னையை வணங்கினார்.
அவருடன் திமுக கடம்புத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் பண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் குபேந்திரன் பண்ணு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆல்பர்ட் மற்றும் திருச்சபை விசுவாசிகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அன்னையிடம் பிரார்த்தனை செய்தனர். மேலும், மப்பேடு காவல் நிலைய போலீசார் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.