தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள பணிமனையில் இருந்து தினமும் 70-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதில் இன்று (ஆகஸ்ட் 14) கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்தில் இருந்து அதிக அளவிலான புகை வெளியேறியதில் எதிரே மற்றும் பின்னால் செல்லும் வாகனங்களுக்கு சாலை தெரியாத வண்ணம் கொசு மருந்து அடித்தார் போல அந்த இடம் காட்சி அளித்தது.
இதனால் பேருந்திற்கு பின்னால் மற்றும் எதிரே வந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மோசமான நிலையில் இருக்கும் பேருந்தை கோவில்பட்டி பணிமனை மேலாளர் உடனடியாக சரி செய்ய வேண்டும் என் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழ் திரைப்படமான, சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் புகை மூட்டத்துடன் பஸ் சென்ற காட்சி போல இருந்ததாக பொது மக்கள் கூறிச் சென்றனர். இவ்வாறு பராமரிப்பு அற்ற நிலையில் அரசு பேருந்துகளை இயக்கி வருவது ஆபத்தை விளைவிக்கும் என பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.