Published : Dec 21, 2023, 11:11 AM IST
கங்கை கொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
அரியலூர்:சனி பெயர்ச்சியை முன்னிட்டு அரியலூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்கை கொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உலகில் வேறு எங்கும் இல்லாத தாமரைப் பூ வடிவில் உள்ள ஒரே பீடத்தில் உள்ள சனி பகவானுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நேற்று சனி பெயர்ச்சியை முன்னிட்டு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். இந்த நிலையில், இந்த கோயிலில் சனி பெயர்ச்சிக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சனி பெயர்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் ஜெயங்கொண்டம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சனிபகவானுக்கு விளக்குகள் ஏற்றியும் வழிபாடு நடத்தினர்.