சத்தியமங்கலத்தில் களைகட்டிய ஆயுதபூஜை கொண்டாட்டம்! - ayudha pooja celeberation in erode
Published : Oct 23, 2023, 4:24 PM IST
ஈரோடு: ஆயுத பூஜை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் பூஜை பொருள்கள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். ஆயுத பூஜை, சரவஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடுகளில் பெண்கள் பக்தியுடன் விரதமிருந்து வீட்டின் நுழைவாயில் மாவிலை தோரணம் கட்டி வாழைக்கன்றுகளைக் கட்டியும் கொண்டாடுவர். இதற்காக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரம் பழம், பூ, பொரி, வாழைக்கன்றுகள் விற்பனைக்கு வந்தன.
சாலையோரங்களில் காலை முதலே மாவிலை, வாழைக்கன்றுகள் கடைகளில் விற்பனை தொடங்கின. விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து வாங்குவதைத் தவிர்த்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்குவதால், விலை சற்று குறைவாகவே உள்ளது எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாவிலை ஒரு கட்டு 25 ரூபாய்க்கும், வாழைக்கன்றுகள் ஜோடி 10 ரூபாய்க்கும், பூ மாலை 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதே வீடுகளில் பூஜை செய்வதற்கு முக்கிய பொருளான வெற்றிலை மற்றும் பாக்கு விற்பனையும் களைகட்டியுள்ளது. சாமி படங்களுக்கு மாலை அணிவிக்கச் செவ்வந்திப்பூ மாலைகள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஒரு முழம் பூ 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.