காந்தியடிகள், காமராஜர் உருவப்படத்திற்கு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை..! - etv news
Published : Oct 2, 2023, 12:58 PM IST
தேனி: மகாத்மா காந்தியடிகளின் 154ஆவது பிறந்த நாள் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள் காந்தியடிகள் மற்றும் காமராஜரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரதாத்தின் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த காந்தி மற்றும் காமராஜர் ஆகியோரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் காந்தி மற்றும் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
முன்னதாக, டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.