ஈரோட்டில் வகுப்பறைக்கு வர்ணம் பூசி முன்மாதிரியாக திகழும் பிளஸ் 2 மாணவர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மலையடிப்புதூரில் அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவில் பயிலும் 90 மாணவ, மாணவியருக்கு அண்மையில் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்தன. இவர்கள் வரும் பொதுத்தேர்வுக்கு தயாராக தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியை விட்டு விடைபெறும் இப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தான் பயின்ற பள்ளிக்கும் ஆசிரியருக்கும் நன்றிக்கடன் செலுத்த முடிவு செய்தனர்.
இதன்படி அவர்கள் சிறியதாக சேர்த்து வைத்த சேமிப்பு தொகையை கொண்டு தாங்கள் பயின்ற இரு வகுப்பறைகளுக்கு வர்ணம் தீட்டி அழகுற செய்தனர். மேலும் கரும்பலைக்கு புதியதாக கருப்பு வர்ணம் தீட்டி வரும் மாணவர்கள் பயன்பெற செய்தனர். தங்கள் வாழ்க்கைக்கு உதவிய பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் பிற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காக வர்ணம் தீட்டியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பள்ளியில் இருந்து விடைபெறுவதற்கு முன்பாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம் பெற்றும் புகைப்படம் எடுத்தும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அண்மையில் தருமபுரி அரசுப்பள்ளியில் செய்முறை தேர்வு முடிந்து பிறகு வகுப்பறை நாற்காலிகள் டேபிகளை உடைத்து சேதப்படுத்திய நிலையில் இப்பள்ளி மாணவர்களின் பெருமைமிகு செயலை பெற்றோர் பாராட்டி வருகின்றனர்.