Navaratri festival: கெஜலெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்! - கெஜலெட்சுமி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்
Published : Oct 21, 2023, 7:29 AM IST
|Updated : Oct 21, 2023, 9:43 AM IST
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம், உலகப் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலின் கட்டடக் கலையையும், சிற்பக் கலையையும் பார்த்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல, இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழா கடந்த அக்டோபர் 15ஆம் தேதி அன்று தொடங்கியது. இதனையடுத்து, தஞ்சை பெரிய கோயிலில் 6ஆம் நாளான் நேற்று (அக்.20) நவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக கெஜலெட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மேலும், நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி மற்றும் முத்துமாரி இளஞ்செழியன் குழுவினரின் பரதநாட்டிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள், இந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.