தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் கோசாலையில் கொண்டாடப்பட்ட மாட்டுப்பொங்கல் விழா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 12:58 PM IST

கோசாலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மாட்டுப்பொங்கல் விழா

திருநெல்வேலி:பொங்கல் விழா நேற்று (ஜன.15) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் தை மாதத்தின் இரண்டாம் நாளில் 'மாட்டுப்பொங்கல்' விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது, மனிதன் உயிர்வாழ விவசாயமும், விவசாயம் உயிர் வாழ உழவுத்தொழிலும் தேவை. அத்தகைய உழவுத் தொழிலுக்கு உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக, மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், இன்று (ஜன.16) மாட்டுப்பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, திருநெல்வேலி மாவட்டம் சி.என்.கிராமத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே கோசாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாடு, கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாட்டுத் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு மஞ்சள் தெளிக்கப்பட்ட நிலையில், மாடுகளுக்கு சந்தனம், குங்குமம், மாலைகள் அணிவிக்கப்பட்டு, கோபூஜைகள் நடத்தப்பட்டன.

தொழுவத்தில் விளக்கு வைத்து, மண்ணில் விளைந்த காய்கறிகளால் படையல் இட்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதன்பின் மாடு மற்றும் கன்றுகளுக்கு பொங்கல், மண்ணில் விளைந்த காய்கறிகள், கரும்பு, அரிசி, பருப்பு, வெள்ளம் உள்ளிட்டவைகளையும் மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details