Published : Dec 13, 2023, 8:49 AM IST
ஈரோட்டில் தெருநாயை கட்டிவைத்து தாக்கும் மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
ஈரோடு:ஈரோடு நகர் பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாயை, அடையாளம் தெரியாத நபர் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் அடுத்த நாடார்மேட்டு பகுதியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்றைய முன்தினம் (டிச.11) இரவு, ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாயைக் கொண்டு வந்து, அவற்றின் வாய் மற்றும் கால்களை அங்கிருந்த கயிற்றால் கட்டி, கடுமையாக தாக்கி காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு நாயை கொடுமையாக தாக்கும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது, இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடப்பதால், இரவு நேரத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, நாய்களை கொடுமையான முறையில் தாக்கும் நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.