அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள்; 12 காளைகள் அடக்கி கார்த்திக் என்பவர் முதலிடம்!
Published : Jan 15, 2024, 10:29 AM IST
அவனியாபுரம் (மதுரை): பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம்தோறும் தமிழ்நாட்டில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மிகவும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று அவனியாபுரம் ஜல்ல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி காலை 8 மணி வாக்கில் தொடங்கி வைத்தார். இன்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் அவிழ்த்து விடப்படும் என தெரிகிறது. அதேபோல் மாடுபிடி வீரர்கள் 300க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது இரண்டு சுற்று முடிவில் இதுவரை மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர். அதில் மாடுபிடி வீரர்கள் 4 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 15 பேரும் காயமடைந்துள்ளனர். அதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மூன்றாம் சுற்று போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் காளை வெற்றி பெற்றுள்ளது. மூன்றாம் சுற்று முடிவில் 12 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். 2ஆம் சுற்றில் களத்தில் நுழைந்த கார்த்திக் 3 சுற்று வரை 12 காளைகளை அடக்கியுள்ளார். கடந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டியில் கார்த்திக் 2வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.