Published : Sep 26, 2023, 5:13 PM IST
திம்பம் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி.. வெளியான காட்சிகள்!
ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கிய லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (செப்.26) அதிகாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, திம்பம் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி லாரியின் முன் பகுதி அந்தரத்தில் தொங்கியபடி அபாய நிலையில் நின்றது.
அப்போது லாரியின் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லாரியை நிறுத்தி கீழே இறங்கி உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து, மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரியை மீட்பதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.