தொடர் விடுமுறை முடிவு; கடும் போக்குவரத்து நெரிசலில் சென்னை! - tambaram Gst road
Published : Oct 3, 2023, 10:31 AM IST
சென்னை: தமிழகத்தில் மிலாது நபி, சனி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விடுமுறையைக் கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில், இன்று விடுமுறை முடிந்து சென்னை திரும்பியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் ஏராளமான ஆம்னி மற்றும் அரசுப் பேருந்துகள் சென்னைக்குள் நுழைந்ததால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அலுவலக நாள் என்பதாலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் கார்கள், வேன்கள், பேருந்துகள், மாநகரப் பேருந்துகள் என பல வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
அது மட்டுமல்லாமல், தாம்பரம் மேம்பாலம் பகுதியிலும் வாகனங்கள் சூழ்ந்து கொண்டு நின்றதால், முடிச்சூர் சாலை, வேளச்சேரியை நோக்கி செல்லும் வாகனங்களும் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. இதனைத் தொடர்ந்து தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.